விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு இருக்கின்றது.
இந்தியாவில் இந்து சமூகத்தினரால் மிகப் பிரசித்தியாக கொண்டாடப்படும் திருவிழா விநாயகர் சதுர்த்தி. விநாயகர் சிலையை நிறுவி ஏழு நாட்கள் ஆட்டம் பாட்டம் என்று கொண்டாடி அந்த சிலையை எடுத்துச் சென்று கடலில் கரைப்பார்கள். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல இடங்களில் பெரிய பெரிய சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்வது வழக்கம்.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம், ஆர்கே பேட்டை பகுதியில் விநாயகர் சிலை வைப்பதற்கு அனுமதி கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அப்போது காவல்துறை சார்பில் மூன்று அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில் அனுமதி கேட்பதால் அங்கு அனுமதி மறுக்கப்பட்டதாக விளக்கம் கொடுத்திருந்தார்கள்.
வேறு இடத்தில் சிலை வைக்க அனுமதி கேட்டால் பரிசீலிக்கப்படும் என்று காவல்துறை சார்பில் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது. மேலும் எளிதில் மக்கக்கூடிய சிலைகளுக்கு மட்டுமே காவல்துறையினர் அனுமதி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கின்றனர்.