கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே இருக்கும் கல்குணம் என்ற கிராமத்தில் திடீர் திடீரென்று நள்ளிரவில் குடிசைகள், கடைகள் தீப்பிடித்து எரியும் சம்பவம் மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. அந்த கிராமத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே அப்பகுதியில் மாட்டு தீவனத்திற்காக வைத்திருந்த வைக்கோல் போர்கள் எரிந்து சாம்பலாக இருக்கின்றது.
இதுவரை 5 குடிசை வீடுகள், மூன்று வைக்கோல் போர்கள் தீப்பிடித்து எறிந்து இருக்கின்றன. வீடுகளுக்கும் வைக்கோல் போர்களுக்கும் யாரேனும் தீ வைக்கிறார்களா? எதற்காக திடீரென்று நள்ளிரவில் தீ பற்றி எரிகின்றது என்று தெரியாமல் மக்கள் குழம்பி போய் இருக்கிறார்கள். இது குறித்து அப்பகுதியில் உள்ள மக்கள் குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே நேற்று மற்றொரு சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. கல்குணம் கிராமத்தின் பக்கத்து ஊரான மீனாட்சி பேட்டை திரௌபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் அப்பகுதியில் தள்ளு வண்டியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகின்றார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடித்துவிட்டு தள்ளு வண்டியை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இரவு 11:30 மணியளவில் திடீரென்று தள்ளுவண்டி தீப்பிடித்து எரிந்தது அப்போது அந்த வழியாக வந்த நபர்கள் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ராஜாராம் இடம் தகவல் சொன்னனர்.
பின்னர் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் அந்த தீயை அணைத்தனர். இருப்பினும் தள்ளுவண்டி கடை முழுவதும் தீயில் எரிந்து சேதம் அடைந்து விட்டது. இதன் மதிப்பு சுமார் 20,000 இருக்கும் என கூறப்படுகின்றது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது,