வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மத்திய மேற்கு வங்க கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுவடைந்து விசாகப்பட்டினம் அருகே கரையே கடைந்தது. இதனால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பலத்த மழை கொட்டி தீர்த்ததால் இரண்டு மாநிலங்களிலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் கடலோர ஆந்திர மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டி உள்ள வட மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக உள்ளது. இது வடமேற்கு திசையில் அடுத்து 2 நாட்களுக்கு நகரும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
இது வடக்கு ஆந்திரா பகுதியை நோக்கி நகர்ந்து வருவதால் தமிழகத்தில் பெரிய அளவில் மழைக்கு வாய்ப்பு இல்லை. இருப்பினும் தமிழக மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கின்றது.
மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் லேசான மலைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது.











