ஆன்லைன் சிறப்பு வகுப்புகள்… தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை கொடுத்த கல்வித்துறை..!

ஆன்லைன் சிறப்பு வகுப்புகள்… தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை கொடுத்த கல்வித்துறை..!

விடுமுறை நாட்களில் ஆன்லைனில் சிறப்பு வகுப்புகள் எடுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 28ஆம் தேதி தொடங்கி வருகிற 6-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஏழாம் தேதி திங்கட்கிழமை மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. காலாண்டு விடுமுறை 9 நாட்கள் என்பதால் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

ஆனால் ஒரு சில தனியார் பள்ளிகள் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களை வரவழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்தி வருகிறார்கள். காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும், மீறி நடத்தினால் அந்த பள்ளிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே எச்சரித்து இருந்தது.

இந்நிலையில் சென்னை, தாம்பரம், மேடவாக்கம், நாமக்கல், ராசிபுரம், கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தி வருவதாகவும், இதில் மாணவர்கள் பங்கேற்க கட்டாயப்படுத்துவதாகவும் புகார்கள் எழுந்தன. தனியார் பள்ளிகளின் இந்த நடவடிக்கை பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சிறப்பு பாடவேளை குறித்த அட்டவணையை சமூக வலைதளங்களில் பகிர்ந்து தங்கள் ஆதங்கங்களை பகிர்ந்து வருகிறார்கள். இந்நிலையில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம் இது குறித்து கேட்டதற்கு கல்வி துறையின் எச்சரிக்கையை மதிக்காமல் சில தனியார் பள்ளிகள் இணைய வழியில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்துவது சரியானது அல்ல. விதிமுறையை மீறி வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.