சென்னையில் கடந்த சில நாட்களாகவே மாலை நேரத்தில் கனமழை பெய்து வருகின்றது. பகல் நேரங்களில் சாரல் மலையும் இரவு நேரங்களில் கனமழையும் பெய்து வருவதால் பருவநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் வசிக்கும் பலருக்கும் சளி, இருமல் காய்ச்சல் அதிகரித்துள்ளது.
இதையடுத்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று வருகிறார்கள். கடந்த சில நாட்களாக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. வழக்கமாக மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளை விட இரண்டு மடங்கு நோயாளிகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது:”சென்னையில் சமீப காலமாக பருவநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பலருக்கும் சளி, இருமல், தொண்டை வலி, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் சென்னையில் உள்ள மாநகராட்சி நகர்ப்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், தனியார் கிளினுக்குகள் போன்றவற்றில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பருவ நிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் சென்னை முழுவதுமே காய்ச்சல் பாதிப்பு பரவி வருகின்றது. எனவே பொதுமக்கள் குடிநீரை நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். வெளியில் உணவை வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பருவநிலை காரணமாக பரவும் காய்களில் இருந்து நம்மை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார்கள்.