தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வரும் 24ம் தேதி பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
சென்னையில் 2-ம் கட்டம் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. 118.09 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமையும் இந்த மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டு இருக்கின்றது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யும்படி தமிழக அரசு பலமுறை கேட்டிருக்கின்றது. ஆனால் இதுவரை மத்திய அரசு தரப்பில் இருந்து எந்த ஒரு நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை மாநில அரசு செய்வதாக மத்திய அரசு கூறியிருந்தது. இதற்கிடையே மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்கவில்லை. இதன் காரணமாக புதிய கல்வி கொள்கை அடிப்படையில் வழங்க வேண்டிய நிதி ஒதுக்கீடை தமிழகத்துக்கு தராமல் மத்திய அரசு நிறுத்தி வைத்திருக்கின்றது.
இந்த நிதியை உடனே விடுவிக்கும்படி தமிழக அரசு பலமுறை கோரிக்கை விடுத்தது. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அனுப்பியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் மத்திய அரசு தனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என கூறிவிட்டது. இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கும், புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் வழங்க வேண்டிய நிதியை விடுவிக்க கோரியும் பிரதமரை சந்திக்க முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் செல்ல முடிவு செய்து இருக்கின்றார்.
சமீபத்தில் அமெரிக்காவிற்கு சென்று சென்னை திரும்பிய இவர் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார். அதன்படி வருகின்ற 25ஆம் தேதி முதல்வர் மு க ஸ்டாலின் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுவார் என கூறப்படுகின்றது. அதன்படி சென்னையில் இருந்து 24 ஆம் தேதி டெல்லிக்கு புறப்பட்டு செல்லும் முதல்வர் மறுநாள் 25ஆம் தேதி காலை பிரதமர் மோடியை சந்தித்து பேச இருக்கின்றார்.
இதை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் முதல்வர் மு க ஸ்டாலின் சந்தித்து பேசுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது. இரண்டு சந்திப்பையும் முடித்துவிட்டு டெல்லியில் மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி வீட்டிற்கு முதல்வர் மு க ஸ்டாலின் செல்ல திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகின்றது.