சாலை விபத்தில் உயிரிழந்த 6 பேருக்கு முதல்வர் மு க ஸ்டாலின் நிவாரணம் அறிவித்திருக்கின்றார். இது தொடர்பாக முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது
“திருச்செந்தூருக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பும் வழியில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், மேட்டத்தூர் கிராமம், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் J.S.நகர் அருகில் இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் TN73 M 8384 என்ற பதிவெண் கொண்ட வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக சாலையோர மரத்தில் மோதிய விபத்தில் இராணிப்பேட்டை மாவட்டம், மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ரவி, செல்வம், ராமலிங்கம், முருகன், துரை மற்றும் சக்தி ஆகிய 6 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்து இருக்கின்றார்.





