தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய பள்ளிக்கல்வி திட்டநிதி நிறுத்தி வைக்கப்பட்டது ஏன்? என்பது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் கொடுத்திருக்கின்றது.
பள்ளிக்கல்வித்துறை திட்டத்தின் செயல்பாடுகளுக்கு ஒவ்வொரு மாநிலத்திற்கும் சில நிதியை மத்திய அரசு சமக்ர சிக்ஷா அபியான் என்ற பெயரில் பள்ளி கல்வி திட்டத்தின் வாயிலாக வழங்கி வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் நான்கு கட்டங்களாக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம். அதாவது ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் கல்வித்துறை சார்ந்த அனைத்து செயல்பாடுகளுக்கும் இந்த நிதி செலவு செய்யப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் முன்மொழியப்படும் மொத்த நிதியில் மத்திய அரசு சார்பில் 60% மாநில அரசு சார்பில், 40 சதவீதமும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அந்த வகையில் தமிழ்நாட்டுக்கு நடப்பாண்டில் மத்திய அரசு 2,152 கோடியை தன் பங்கு நிதியாக வழங்குவதற்கு முன்மொழிந்து இருந்தது. அதில் முதல் கட்ட நிதியாக 573 கோடியை கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு கொடுத்திருக்க வேண்டும்.
ஆனால் தற்போது வரை முதல் கட்ட நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. மத்திய அரசின் பி எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழக அரசு இணைவதற்கு ஒப்புக் கொள்ளாத காரணத்தால் அந்த நிதியை நிறுத்தி வைப்பதாக கூறியிருந்தது. பி எம் ஸ்ரீ திட்டத்தில் தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிட்டுள்ள மும்மொழி கல்வி கொள்கை இருப்பதால் அதை தமிழக அரசு ஏற்க மறுத்து விட்டதாக கூறப்படுகின்றது.
இதனால் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நிதி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நிதி எதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தற்போது விளக்கம் கிடைத்துள்ளது. ‘2024 25 ஆம் ஆண்டுக்கான சமக்ர சிக்ஷா அபியான் நிதியை வழங்க சில நிர்வாக அனுமதி பெற வேண்டி உள்ளது. அந்த நிர்வாக செயல்முறைகள் முடிந்ததும் எப்போது நிதி ஒதுக்கப்படும் என்கின்ற விவரம் தெரிவிக்கப்படும்’ என மத்திய அரசு சார்பாக விளக்கம் கொடுத்துள்ளது.