tamilnadu
பயிற்சியின் போது ஈட்டி தலையில் பாய்ந்த சிறுவன்… மூளைசாவு ஏற்பட்டதில் உயிரிழப்பு…!
சக மாணவர் வீசிய ஈட்டி தலையில் பாய்ந்த நிலையில் பள்ளி மாணவனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், வடலூர் பகுதியை சேர்ந்தவர் திருமுருகன் நெய்வேலியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகின்றார். இவரின் மனைவி சிவகாமி. இந்த தம்பதியின் மகன் கிஷோர். இவருக்கு 15 வயதாகின்றது. தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகின்றார். விளையாட்டில் அதிக ஆர்வம் இருந்த கிஷோர் மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த 24ஆம் தேதி பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கான விளையாட்டு பயிற்சி நடைபெற்று வந்தது. அப்போது ஒரு மாணவன் ஈட்டி எரியும் பயிற்சி செய்து வந்திருக்கின்றார். அவர் வீசிய இடி எதிர்பாராத விதமாக அங்கு நின்று கொண்டிருந்த கிஷோரின் தலையில் பாய்ந்து ரத்தம் வெளியேறியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் கிஷோர் மூளை சாவு அடைந்திருக்கின்றார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் சிவகாமி கதறி அழுதார். மனமுடைந்த நிலையில் இருந்த அவர் தற்கொலை முயற்சி செய்ததாக கூறப்படுகின்றது.
இதையடுத்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருக்கின்றார். இன்று ஈட்டி தலையில் பாய்ந்ததில் மூளை சாவு அடைந்த சிறுவன் இன்று முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் உயிரிழந்திருக்கின்றார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.