லஞ்சம் வாங்கி மாட்டிய BDO – பயத்திலேயே உயிரை விட்ட பரிதாபம் !

லஞ்சம் வாங்கி மாட்டிய BDO – பயத்திலேயே உயிரை விட்ட பரிதாபம் !

லஞ்சம் வாங்கி கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புப் போலிஸாரிடம் மாட்டிக்கொண்ட பெண் அதிகாரி அந்த பதற்றத்திலேயே மாரடைப்பு வந்து இறந்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் உள்ள கன்னிவாடி என்ற கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ரமேஷ். சுயதொழில் செய்து வரும் இவர் வீடுகட்டுவதற்காக தனது வீட்டுமனையை வரைமுறைப் படுத்த அந்த பகுதி வட்டார வளர்ச்சி அலுவலர் (BD0) ஜெயந்திராணி என்பவரை அனுகியுள்ளார். ஆனால் அவரோ பலமுறை ரமேஷை இழுத்தடித்துள்ளார். பின்னர் ஒரு கட்டத்தில் பணியை செய்து முடிப்பதற்கு 34000 ரூபாய் லஞ்சமாகக் கேட்டுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியான ரமேஷ், திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி மணிகண்டனிடம்,புகார் அளித்துள்ளார். ஜெயந்திராணியைக் கையும் களவுமாக பிடிக்க திட்டம் தீட்டிய அவர்கள் ரமேஷிடம் அலுவலகத்தில் வைத்து லஞ்சம் கொடுக்க சொல்லி அறிவுறுத்தியுள்ளனர். அதை அவர் பின்பற்ற அலுவலகத்தில் மாறுவேடத்தில் இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ஜெயந்திராணியை கையும் களவுமாகப் பிடித்துள்ளனர்.

இதை சற்றும் எதிர்பாராத ஜெயந்திராணி பதற்றமடைந்து போலிஸாரிடம் இனிமேல் லஞ்சம் வாங்கமாட்டேன் என்று கெஞ்சி தன்னை விட்டு விட சொல்லியுள்ளார். ஆனால் போலீஸார் அவரது பேச்சைக் கேட்காமல் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லும் வழியில் பதற்றத்தில் நெஞ்சுவலி வந்து மயங்கியுள்ளார். இதை அடுத்து போலிஸார் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் மாரடைப்பில் இறந்துவிட்டார். இந்த சம்பவமானது கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.