தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்யும் பணியில் தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையமான ஆவின் ஈடுபட்டு வருகின்றது. ஆவின் நிறுவனம் மூலமாக தினசரி 35 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகின்றது. இந்த பால்கள் அனைத்தும் ஆரஞ்சு, பச்சை, ஊதா, நீல நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
அது மட்டும் இல்லாமல் வெண்ணெய், தயிர், மோர் உள்ளிட 200க்கும் மேற்பட்ட பால் பொருட்களை தமிழக அரசு விற்பனை செய்து வருகின்றது. இந்த பொருள்களை தமிழகம் முழுவதும் உள்ள 27 ஒன்றியங்கள் வாயிலாக தயாரித்து ஆவின் பாலகங்கள் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகின்றன.
ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் அனைத்து இடங்களிலும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் பல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் புதிய பொருட்களை அறிமுகப்படுத்தவும் தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடந்த வாரம் நிருபர்களிடம் பேசிய போது மூலிகைகள் சேர்ந்த பால், சுக்குமல்லி காபி, அஸ்வகந்தா பால் போன்றவற்றை விரைவில் மக்களுக்கு கொடுக்க உள்ளோம் என்று தெரிவித்திருந்தார்.
இந்த மூன்று புதிய பொருட்கள் தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று அவர் கூறியிருந்தார். இந்நிலையில் ஆவின் நிறுவன அதிகாரிகள் தெரிவித்திருந்ததாவது “ஆவினில் மூலிகைகள் சேர்ந்த பால்கள், சுக்குமல்லி காபி, அஸ்வகந்தா பால் ஆகிய மூன்று புதிய பொருட்களை அறிமுகப்படுத்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதற்காக ஒரு தொழில்நுட்பக் குழு இவற்றின் மாதிரிகளை ஆய்வு செய்து வருகின்றனர். விரைவில் ஒரு நல்ல முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஆவின் சார்பில் ரோஸ் மில்க் அறிமுகப்படுத்தினோம் அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கின்றது. இதுபோல இந்த மூன்று பொருட்களுக்கும் வரவேற்பு கிடைக்கும்” என்று எதிர்பார்க்கப்படுகின்றது.