இந்து தீவிரவாதம் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசிய கருத்துக்கு சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார்.
அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரம் செய்த கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி கோட்சே எனக் கூறியதை, அதிமுகவினரும், பாஜகவினரும் கையில் எடுத்து அதை சர்ச்சையாக்கி அவருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும், கமல்ஹாசனின் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். அதோடு, தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பல காவல் நிலையங்களிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, எந்நேரத்திலும் கமல்ஹாசன் கைது செய்யப்படலாம் என்கிற பதட்டம் எழுந்துள்ளது.
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் “கமல்ஹாசன் கூறியது சரித்திர உண்மை. அரசியல் சுயலாபத்திற்காக அவர் கூறியதை வைத்து அரசியல் செய்கின்றனர்” என தெரிவித்தார்.