அதிக நேரம் டிவி பார்ப்பதாக கூறி 5 வயது சிறுமியை தாயே அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் காட்டுப்புத்தூரில் வசித்து வருபவர் பாண்டியன். இவர் கல்லுரியில் பேராசிரியாக பணிபுரிந்து வருகிறார். அவரின் மனைவி நித்ய கமலா. இந்த தம்பதிக்கு லத்திகா ஸ்ரீ என்கிற 5 வயது மகள் இருக்கிறாள்.
லத்திகா அதிக நேரத்தை டிவி பார்ப்பதில் செலவு செய்திருக்கிறாள். படிப்பில் கவனம் செலுத்தாமல் அடிக்கடி ஏன் டிவி பார்க்கிறாய் என அவரின் தாய் நித்ய கமலா கண்டித்துள்ளார். ஆனாலும், சிறுமி கேட்கவில்லை.
நேற்று மீண்டும் சிறுமி தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்த போது, ஆத்திரமடைந்த நித்ய கமலா, மகள் என்றும் பாராமல், குக்கர் மூடியாமல் சிறுமியின் தலையில் அடித்துள்ளார். அதன் பின்னரும் கோபம் குறையாமல், வீட்டிற்கு வெளியே சிறுமியை கடும் வெயிலில் நீண்ட நேரம் நிற்க வைத்துள்ளார்.
ஒருகட்டத்தில் சிறுமி மயங்கி கீழே விழுந்தார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் காயங்களுடன் கிடந்த சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். ஆனால், சிகிச்சை பலனின்றி சிறுமி மரணம் அடைந்தார்.
இதையடுத்து, சிறுமியின் தாய் நித்ய கமலாவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.