மகள் திருமண நிகழ்வில் அவரின் தந்தை அதிர்ச்சி மரணம் அடைந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் நீண்டகராபுத்தன்துறை பகுதியில் வசித்து வந்தவர் விஷ்ணுபிரசாத்(55). இவர் திருவனந்தபுரத்தில் அருகே உள்ள கரமனை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவரின் 3வது மகள் ஆர்சாவுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. தன் குடும்பத்தில் கடைசி திருமணம் என்பதால் பலரையும் அழைத்தும், மிகவும் செலவு செய்து விமர்சையாக ஆர்ச்சாவின் திருமணத்தை விஷ்ணுபிரசாத் நடத்தியுள்ளார்.
விடிந்தால் திருமணம் என்பதால் நிச்சயதார்த்த நிகழ்ச்சி விமர்சையாக நடந்தது. இசைக்கச்சேரிக்கும் அவர் ஏற்பாடு செய்திருந்தார். அவர் நன்றாக பாடக்கூடியவர் என்பதால் அவரை பாடச்சொல்லி நண்பர்கள் வற்புறுத்த மேடையேறி ஒரு பாடலை பாடியுள்ளார். பாடிக்கொண்டிருக்கும் போதே திடீரென அவர் சரிந்து கீழே விழுந்தார். இதனைக்கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் நிச்சயதார்த்தம் தடைபட வேண்டாம் எனக்கூறிவிட்டு அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால், அதை மறைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும், காலையில் திருமணத்திற்கு தந்தை வருவார் என அவரின் மகளிடம் கூறி, அதேபோல் திருமணத்தையும் நடத்தி முடித்துவிட்டனர். திருமணம் முடிந்த பின்னரே அவர் மரணமடைந்தது பற்றி ஆர்ச்சாவிடம் தெரிவித்தனர். இதனால், திருமண வீடே சோகமானது.