Tamil Cinema News
பிகில் பட விழாவுக்கு எப்படி அனுமதி கொடுத்தீங்க? – களத்தில் இறங்கிய தமிழக அரசு
பிகில் பட விழாவை நடத்த எதன் அடிப்படையில் அனுமதி கொடுக்கப்பட்டது என சாய்ராம் கல்லூரி நிர்வாகத்திடம் தமிழக அரசு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் ஜெயஸ்ரீ மரணத்தில் யார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை செய்யாமல் லாரி ஓட்டுனரையும், பேனர் தயாரித்தவரையும் குறை சொல்கிறார்கள் எனக்கூறினார். அதேபோல், யாரை எங்கே வைக்க வேண்டுமோ அங்கே வைத்தால் எல்லாம் சரியாக இருக்கும் எனவும் அவர் அதிரடியாக பேசினார். ஆளும் அதிமுக தரப்பினரையே அவர் கூறியிருக்கிறார் என பலரும் கூறி வருகின்றனர். விஜயின் இந்த பேச்சு அதிமுகவினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பலரும் எதிர்வினையாற்ற துவங்கிவிட்டனர். படத்தை ஓட வைக்க வேண்டும் என்பதற்காகவே விஜய் இப்படி பேசியுள்ளார் என அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ஜெயக்குமார் உள்ளிட்டோர் பேட்டி கொடுத்தனர்.
இந்நிலையில், பிகில் பட இசை வெளியீட்டு விழா நடந்த சாய்ராம் கல்லூரி நிர்வாகத்திற்கு தமிழக உயர் கல்வித்துறை ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், எதன் அடிப்படையில் பிகில் விழாவுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விஜய் மீதுள்ள கோபத்தில் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தமிழக அரசு இப்படி செய்து வருகிறது என விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.