இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பசியால் வாடிய மூன்று இளைஞர்கள் பாம்பு வேட்டையாடி சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக 21,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தொழில்களும் முடங்கியுள்ள நிலையில் பல இடங்களில் மக்கள் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அவ்வாறு பாதிக்கப்பட்ட அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள், பாம்பை வேட்டையாடி உணவு சமைத்து சாப்பிட முயன்றுள்ளனர்.
பாம்பைப் பிடித்துக் கொலை செய்த அவர்கள் அதை வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட அதையறிந்த போலிஸார் அவர்களைக் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அந்த இளைஞர்கள் அரிசி இல்லாத காரணத்தால் காடுகளில் வேட்டைக்கு சென்றதாகவும் அப்போது இந்தப் பாம்பை உணவுக்காக வேட்டையாடியதாகவும் கூறியுள்ளனர். ஆனால் இதனை மறுத்துள்ள அம்மாநில அரசு மூன்று மாதங்களுக்கான அரிசி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதையடுத்து அந்த மூன்று பேர் அரிய வகைப் பாம்பை கொன்றது தொடர்பாக வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.