1200 தொழிலாளர்களோடு கிளம்பியது முதல் ரயில்! ஊரடங்குக்குப் பின் முதல் பயணம்!

1200 தொழிலாளர்களோடு கிளம்பியது முதல் ரயில்! ஊரடங்குக்குப் பின் முதல் பயணம்!

மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தபடி வெளிமாநில தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு முதல் ரயில் தெலங்கானாவில் இருந்து கிளம்பியுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு மாநில தொழிலாளர்கள் வெளி மாநிலங்களில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு நடைபயணமாக சென்றது சர்ச்சைகளைக் கிளப்பியது. மேலும் மும்பை ரயில் நிலையம் அருகே ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியதும் சர்ச்சையைக் கிளப்பியது.

இப்போதைக்கு ஊரடங்கு நீக்கப்பட வாய்ப்பில்லை என்பதால் வெளி மாநில தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு செல்ல மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதன் படி தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டவர்கள் அவரவர் மாநிலங்களுக்குத் திரும்ப அனுமதி அளிக்கப்படுகிறது. மாநில அரசுகளால் நியமிக்கப்படும் அதிகாரிகள்  குழுவின் பரிந்துரையின் படி பேருந்துகளில் சமூக இடைவெளியோடு அவர்கள் கொரோனா சோதனை செய்து அனுப்பப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இன்று 1200 ஜார்கண்ட் மாநில தொழிலாளர்களோடு ஊரடங்குக்குப் பின்னான முதல் ரயில் தெலங்கானா மாநிலத்தில் இருந்து கிளம்பியுள்ளது. இந்த ரயிலில் பயணிகள் சமூக இடைவெளியோடு அழைத்து செல்லப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மற்ற மாநிலத்தில் உள்ள புலம்பெயர்ந்தவர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.