பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயிலில் ஹனுமன் ஜெயந்தி மஹோத்ஸவத்தையொட்டி பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
புதுச்சேரி – திண்டிவனம் சாலை பஞ்சவடியில் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு 36 அடி உயரம் கொண்ட பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இக்கோயில் வளாகத்தில் மஹா கணபதிக்கும், பட்டாபிஷேக கோலத்தில் ராமருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில் செய்யப்பட்ட வெங்கடாசலபதிக்கு தனி சன்னதி எழுப்பப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் புத்தாண்டையொட்டி ஜன.1-ம் தேதி இக்கோயிலில் சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது. தொடர்ந்து நேற்று ஹனுமன் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை ராமர் சன்னதியில் விஸ்வரூப தரிசனம் மற்றும் கோபூஜையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து தனுர்மாத பூஜையும், யாகசாலையில் யஜமான மகாசங்கல்பத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
காலை 8.30 மணிக்கு பஞ்சமுக ஆஞ்சநேயர் சன்னதியில் ராம சொர்ண பாதுகைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் 36 அடி பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 2 ஆயிரம் லிட்டர் பால், இளநீர், பன்னீர் மற்றும் மங்கள வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
யாகசாலையில் பூர்ணாஹூதி முடிந்தவுடன் கடம் புறப்பட்டு கோயிலை வளம் வந்து சன்னதி வந்தடைந்தது. தொடர்ந்து சாமிக்கு புரோஷணம் நடந்தது. 12 மணிக்கு ஆஞ்சநேயருக்கு 1,008 வடைகள் கொண்ட பூரண வடமாலைகள் சாற்றப்பட்டது. சிறப்பு அலங்காரம் முடிந்து மகா தீபாராதனை செய்து வேதகோஷங்கள் முழங்க விசேஷ திருவாராதனம் நடந்தது. மாலையில் ராமர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.











