Latest News
சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு தளர்வுகள் அறிவிப்பு
கேரளாவில் கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடு தளர்வுகளை கேரள அரசு அறிவித்துள்ளது.
கேரளாவில் கரோனா வைரஸ் பாதிப்பு குறையாமல் இருந்ததையடுத்து, மகரவிளக்கு, மண்டல பூஜைக்கு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை கேரள அரசு விதித்திருந்தது.
பக்தர்கள் கண்டிப்பாக ஆன்-லைன் மூலம் தரிசனத்துக்கு முன்பதிவு செய்யவேண்டும், அப்போது கரோனா தடுப்பூசி சான்றிதழை இணைக்க வேண்டும், தரிசனத்துக்கு 72 மணிநேரத்துக்கு முன்பாக பிசிஆர் பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என கட்டு்பபாடுகள் விதித்தது.
அதுமட்டுமல்லாமல் வழக்கமாக வரும் பாதைகளை அடைத்து, அனைத்து பக்தர்களும் பம்பை வழியாகவே வர வேண்டும், புலிமேடு வழியாக வரக்கூடாது என்று உத்தரவிட்டது. மேலும், சன்னிதானத்தில் பக்தர்கள் தங்குவதற்கும் அனுமதியில்லை, பம்பா நதியில் குளிக்கவும் பக்தர்களுக்கு அனுமதியளிக்கவில்லை.
இதனால் பக்தர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர், கோயிலுக்கு வரும் பக்தர்களை நம்பி கடைகளை குத்தகைக்கு எடுத்தவர்களுக்கும் பெரிய இழப்பைச் சந்தித்தனர்.
இதையடுத்து, கேரளாவில் கரோனா வைரஸ் பரவல் குறைந்துவருவதையடுத்து, கட்டுப்பாடுகள் தளர்வுகளை அளிப்பது குறித்து கேரள முதல்வர் பினராயிவிஜயன், திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு நிர்வாகிகள், தேவஸம்போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன்,உயர் அதிகாரிகள் நேற்று கூடி ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனையின் முடிவில் சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை கேரள அரசு அறிவித்துள்ளது. இதன்படி, சபரிமலைக்கு பக்தர்கள் வழக்கமாக வரும் பம்பையிலிருந்து நீலிமலை ஏற்றம், அப்பச்சி மேடு, மரக்கூட்டம் ஆகிய பாதைகளை மீண்டும் திறக்கவும் அதில் பக்தர்களை அனுமதிக்கவும் முடிவு எடுக்கப்பட்டது. நீலிமலை மற்றும் அப்பச்சி மேட்டு பகுதியில் பக்தர்கள் வசதிக்காக மருத்துவ வசதிகள் செய்யவும் முடிவு எடுக்கப்பட்டது.
சன்னிதானத்தில் பக்தர்கள் தங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்காக கரோனா பாதுகாப்பு வழிமுைறகளைப் பின்பற்றி 500 அறைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பம்பை ஆற்றில் வெள்ள நீர் குறைந்துவிட்டதால், பக்தர்கள்சமூக விலகலைக் கடைபிடித்து, குளிக்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
