நீட் தேர்வு மோசடி : மாணவர் இர்ஃபானின் தந்தையும் போலி மருத்துவர்

நீட் தேர்வு மோசடி : மாணவர் இர்ஃபானின் தந்தையும் போலி மருத்துவர்

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக அடுத்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட மாணவர் இர்ஃபானின் தந்தை ஒரு போலிமருத்துவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வில் சென்னையை சேர்ந்த மாணவர் உதித் சூர்யா ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவகல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. . நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் மத்தியில் இந்த விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, இந்த வழக்கை காவல் துறையினர் விசாரித்தனர். அதன்பின் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

விசாரணையில் உதித் சூர்யாவின் தந்தை மருத்துவர் வெங்கடேசன் கேரளாவை சேர்ந்த ஒரு இடைத்தரகரிடம் ரூ.20 லட்சம் லஞ்சமாக கொடுத்து இந்த மோசடியை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அவரை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். அதன்பின் உதித் சூர்யாவின் நண்பர்களும், அவர்களின் தந்தைகள் ஒன்றாக இணைந்துதான் ஆள் மாறாட்டம் செய்துள்ளது விசாரணையில் அம்பலமானது. இதில், தர்மபுரி மருத்துவ கல்லூரியில் படிக்கும் இர்ஃபான் என்கிற மாணவர் சிக்கினார். அவரை போலீசார் தேடிவந்த போது நீதிமன்றத்தில் சரணடைந்தார். தற்போது அவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தனது மகனை மருத்துவர் ஆக்க நினைத்து, தற்போது போலீசாரிடம் சிக்கியுள்ள இர்ஃபானின் முகமது சஃபி ஒரு போலி மருத்துவர் என்பது அம்பலமாகியுள்ளது. மருத்துவ படிப்பை பாதியில் விட்டுவிட்டு வந்த அவர் வேலூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் க்ளீனிக்குகளை நடத்தி வந்ததும் சிபிசிஐடி போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.