robbery

நகைக்கடை கொள்ளை சம்பவம் – தப்பி ஓடிய சுரேஷ் கைது

திருச்சி லலிதா ஜூவல்லரியில் நகைகளை கொள்ளையடித்த கும்பலை சேர்ந்த அடுத்த குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் திருச்சியில் உள்ள பிரபல லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் ரூ.13 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை முகமுடி அணிந்த கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். கடையின் பின்புறம் உள்ள சுவற்றில் துளையிட்டு அவர்கள் இந்த திருட்டு சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். இதில் தொடர்புடையவர்கள் வடமாநில கொள்ளையர்கள் என முதலில் செய்திகள் வெளியானது.

தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, கையில் பையுடன் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை போலீசர் பிடித்தனர். அதில் சுரேஷ் என்பவன் மட்டும் தப்பி ஓடுவிட மணிகண்டன் என்பவன் மட்டும் சிக்கிக் கொண்டான். மணிகண்டன் வைத்திருந்த பையில் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 4.5 கிலோ நகைகள் இருந்தன. மணிகண்டனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன் 8 பேர் கொண்ட கும்பலை வைத்து இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தப்பி ஓடிய சுரேஷ் போலீசாரிடம் சிக்கியுள்ளான். எனவே, சுரேஷ் மற்றும் மணிகண்டனை திருவாரூரில் உள்ள ஆயுதப்படை அலுவலகத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.