Corona (Covid-19)
கொரோனா பாதித்த நபர் மீது கொலை முயற்சி வழக்கு – திருச்சியில் பரபரப்பு
தமிழகத்தில் திருச்சியில் கொரோனா பாதித்த நபர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களை கண்டறிவதில் அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், சிலரை வீட்டு கண்காணிப்பிலும், பாதிப்புக்கு உள்ளானவர்களை அரசு மருத்துவமனையிலும் வைத்து சிகிச்சை அளித்து வருகிறது.
இந்நிலையில் கொரோனா பாதித்த சிலர் மருத்துவமனையை விட்டு எவருக்கும் தெரியாமல் ஓடி வருவது வாடிக்கையாக நடந்து வருகிறது. அரசுத் தரப்பு என்னதான் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கூறினாலும், சிலர் அதீத பயத்தால் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருச்சியில் பரபரப்பு சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது.
திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா பாதித்தவர்க்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். ஆனால் அந்த நபரோ சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்ததாக கூறப்படுகின்றது. மருத்துவர்கள் அவருக்கு ஆலோசனைகள் கூறிய நிலையில் திடீரென்று அந்த நபர் மருத்துவர் மீது எச்சில் துப்புவதும், முககவசங்களை எடுத்து வீசுவதுமாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதனையடுத்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் புகார் அளித்த நிலையில், கொரோனா பாதித்த நபர் மீது கொலை முயற்சி வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் முதல் செவிலியர்கள் வரை தங்கள் குடும்பங்களை விட்டு இரவும் பகலுமாக பாடுபட்டு வருகின்ற இச்சமயத்தில் மருத்துவர்கள் மீதான தாக்குதல்கள் பெரும் எரிச்சலூட்டுகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.