murder

பாட்டி என கூப்பிட்டதற்கு திட்டியதால் கொலை – மூதாட்டி கொலையில் திருப்பம்

பாட்டி என அழைத்ததை கண்டித்ததால் மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் சென்னை கொடுங்கையூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொடுங்கையூர் பகுதியில் வசித்து வருபவர் விமலா. வயது 68. இவரின் இரண்டு மகள்கள் மற்றும் மகன்கள் திருமணமாகி செட்டில் ஆகிவிட்டனர். விமலா சென்னை பெருநகர போக்குவரத்து கழகத்தில் சோதனை ஆய்வாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரின் கணவர் கோவிந்தராஜ் மறைந்து விட்டதால் விமலா சென்னை கொடுங்கையூரில் சுதாகர் என்பவரது வீட்டில் வாடகைக்கு தனியாக வசித்து வந்தார்.தனக்கு வரும் ஓய்வூதியத்தில் அவர் வாழ்க்கையை கழித்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் கடந்த 11ம் தேதி திடீரென விமலா வீட்டில் பிணமாக மீட்கப்பட்டார். அவருக்கு அடிக்கடி வலிப்பு வரும் என்பதால் அதனால் இறந்திருக்கலாம் என அவர் குடும்ப உறுப்பினர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அதை இயற்கைக்கு மாறான மரணம் என பதிவு செய்திருந்தனர்.

ஆனால் பிரேத பரிசோதனையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு மரணமடைந்தது தெரியவந்தது. எனவே, கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் அக்கம் பக்கத்தில் விசாரணை நடத்தினர். அதில் விமலா அழகுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பவர், இரவு நேரங்களில் கூட நேர்த்தியாக, அழகாக உடை அணிவார் என்றும் அவர்கள் கூறினர். இதன் அடிப்படையில் அவர் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் சுதாகரை போலீசார் விசாரணை செய்தனர். இதில் அவர்தான் விமலாவை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒருமுறை விமலாவை பாட்டி என அவர் அழைத்துள்ளார். இதில் கோபம் அடைந்த விமலா சுதாகரை தகாத வார்த்தைகளில் திட்டி அசிங்கப்படுத்தி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுதாகர் மதுபோதையில் வீட்டுக்கு வீட்டுக்கு வந்தபொழுது, விமலாவின் வீட்டில் நுழைந்து அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் கொடுங்கையூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.