maha - Man complaing on his wife who married 15 men - tamilnaduflashnews.com

அப்பாவி ஆண்களை ஏமாற்றி 15 திருமணம் – திருச்சியில் ஒரு மோசடி பெண்!

15 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்களிடமிருந்து நகை, பணம் ஆகியற்றை திருச்சியை சேர்ந்த பெண் பறித்து சென்ற விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார்குடியை சேர்ந்த உதயகுமார்(35) சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். விவாவகரத்தான இவர் 2வது திருமணம் செய்ய விரும்பி மேட்ரிமோனியல் மூலம் பெண் தேடியுள்ளார். அப்போது, திருச்சியை சேர்ந்த மகாலட்சுமி இவரை தொடர்பு கொண்டார். தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கணவரை பிரிந்துவிட்டதால் 2வது திருமணம் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார். அவரின் அழகில் மயங்கிய உதயகுமார் 2017ம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார்.

மன்னார்குடி வ.உ.சி நகரில் சில நாட்கள் அவருடன் குடும்பம் நடத்திய உதயகுமார் மீண்டும் சிங்கப்பூருக்கு சென்றுவிட்டார். இதையடுத்து சில மாதங்கள் கழித்து தான் கர்ப்பமாக இருப்பதாக அவரிடம் மகாலட்சுமி கூறியுள்ளார். எனவே, மனைவியை பார்க்கும் ஆசையில் உதயகுமார் மன்னார்குடி வந்துள்ளார். ஆனால், வீடு பூட்டியிருந்தது. அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்ததில், வீட்டில் இருந்த பொருட்களை எடுத்துக்கொண்டு அவரும், அவரின் தாயாரும் சென்றுவிட்டதாக கூறியுள்ளனர்.

இதுகேட்டு அதிர்ச்சி அடைந்த உதயகுமார் மகாலட்சுமியின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டார்.  ஆனால் அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த உதயகுமார் மனைவியை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.  அதன்பின், ஏதேச்சையாக மகாலட்சுமியின் மின்னஞ்சலை பார்த்த போது, அவர் பல ஆண்களுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. மேலும், அவர் ஏற்கனவே 15 பேரை ஏமாற்றி திருமணம் செய்ததும் உதயகுமாருக்கு தெரியவந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த உதயகுமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார் “ மகாலட்சுமி இதுவரை 15 பேரை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். இதன் மூலம் பல லட்சம் பணம் மற்றும் நகைகளை பறித்துள்ளார். மேலும், கர்ப்பத்தை கலைத்து விட்டு, கணவர் எட்டி உதைத்ததால்தான் கருக்கலைந்தது என புகார் அளிப்பேன் எனக்கூறி அனைவரையும் மிரட்டி பணம் பறித்துள்ளார். என்னையும் அப்படி மிரட்டவே அவர் திட்டமிட்டிருப்பதாக அறிகிறேன். தற்போது அவரும், அவரின் தாயும் ஆந்திரா பக்கம் சென்றுள்ளனர். அங்கு யாரோ ஒரு தொழிலதிபருக்கு வலை விரிக்க சென்றுள்ளனர். அவரை பற்றிய ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது.என்னைப்போல் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே போராடுகிறேன் என தெரிவித்தார்.

மொத்தம் 16 ஆண்களை திருமணம் செய்து மோசடி செய்து விட்டு ஆந்திராவுக்கு சென்றுள்ள மகாலட்சுமியின் மீது போலீசார் ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்? அவருக்கு ஆதரவாக இருக்கும் பெரிய புள்ளி யார்? என உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.