தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கில் எவ்வித தளர்வும் இருக்காது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் இன்று முதல் சில அத்தியாவசிய பணிகளுக்கான ஊரடங்கு தளர்த்தப்படும் என்றும் இதுகுறித்து அந்தந்த மாநில அரசே முடிவெடுக்கலாம் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்திய கேரளா ஒருசில அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இது சம்மந்தமாக தெரிவித்துள்ள தமிழக அரசு ‘நோய்த் தொற்று மேலும் பரவுவதை தடுக்க கடும் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்த வேண்டியுள்ளதால், மாநில பேரிடர் மேலாண்மை சட்டம்-2005ன்படி தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் இதர கட்டுப்பாடுகள் அனைத்தும் மத்திய அரசு அறிவித்துள்ள 3.5.2020ஆம் தேதி வரை தொடர்ந்து கடைபிடிக்க தமிழ்நாடு அரசால் முடிவு செய்துள்ளது.
அத்தியாவசியப் பணிகள் மற்றும் சேவைகளுக்கு ஏற்கனவே அரசால் அளிக்கப்பட்ட விதி விலக்கு தொடரும். நோய்த்தொற்றின் தன்மையை மீண்டும் ஆராய்ந்து, நோய்த் தொற்று குறைந்தால், வல்லுநர் குழுவின் ஆலோசனையினை பெற்று, நிலைமைக்கு ஏற்றாற்போல் தகுந்த முடிவுகள் எடுக்கப்படும்.’ எனத் தெரிவித்துள்ளது.





