Latest News
வித்தியாசமான முறையில் கொண்டாடப்படும் குலசேகரப்பட்டினம் நவராத்திரி
இந்தியாவின் ஆன்மிக விழாக்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமானது, இனத்தால் மொழியால், ஜாதியால் பலர் பிளவுபட்டிருந்தாலும் இறை சக்தி என்ற அந்த நேர்கோட்டில் அனைவரையும் ஒன்று சேர்ப்பது இறைசக்திதான்.
அந்த வகையில் அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து கோலாகலமாக , குதூகலமாக கொண்டாடும் ஒரு விழாதான் குலசேகரப்பட்டினம் நவராத்திரி விழா.
நீங்கள் சாதாரண நாட்களில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு சென்றால், ஆட்டோ, லோடு வாகனங்கள் அனைத்திலும் ஸ்ரீ குலசை முத்தாரம்மன் துணை என்று எழுதப்பட்டிருக்கும் அந்த அளவிற்கு இந்த பகுதிகளில் இந்த குலசை முத்தாரம்மனுக்கு பக்தர்கள் அதிகம்.
கர்நாடகாவில் கொண்டாடப்படும் தசரா விழா போன்று தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் மிகப்பெரிய விழா இது.
திருமணம், குழந்தையின்மை, கல்வி, வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்து மக்கள் இங்கு வழிபடுகின்றனர். அவர்கள் வைக்கும் காரியம் வெற்றி பெற்றுவிட்டால் அடுத்த வருட தசரா விழாவுக்கு விழா தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்பே கடும் விரதம் இருந்து மாறுவேடம் போட்டு பலரிடம் சென்று யாசகம் பெறுகின்றனர் பின்பு அதை கோவிலில் காணிக்கையாக செலுத்துகின்றனர்.
இது போல யாசகம் பெற்று மாறுவேடம் பூண்டு யாசகம் பெற்று அதை செலுத்துவதாக அவர்கள் முன்பே நேர்த்திக்கடன் வைத்துத்தான் தங்கள் கோரிக்கையை முத்தாரம்மனிடம் வைக்கின்றனர் .
விழா தொடங்கும் முன் ஒரு மாதத்திற்கு முன் தூத்துக்குடி, நெல்லை மாவட்ட பஸ் ஸ்டாண்ட்கள், பொது இடங்களில் வித்தியாசமான உடை அணிந்து யாசகம் பெறும் பல நபர்களை இங்கு பார்க்க முடியும்.
நவராத்திரி 9 நாட்களும் மிக சிறப்பாக விமரிசையாக விழா நடைபெறுகிறது. 10ம் நாளன்று விஜயதசமி விழா அன்று மகிசாசுரனை குலசேகரப்பட்டினம் கடற்கரையில் முத்தாரம்மன் வதம் செய்வாள்.
தூத்துக்குடி கடலில் உள்ள முத்துக்களை தாராளமாக கிடைத்த முத்துக்களை எடுத்து, அதை ஆபரணங்களாக்கி, பாண்டிய மன்னர்கள், அன்னைக்கு சூட்டி அழகு பார்த்ததால், அம்பிகை முத்தாரம்மன் என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.
உடலில் ஏற்படும் அம்மை முத்துக்களை, முத்தாரம்மனை வேண்டி வழிபட்டால் உடனே குணமாக்குபவள் என்பதால் முத்தாரம்மன் என்று பெயர் பெற்றதாகவும், அம்பாளின் பெயர் குறித்து பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.
பராசக்தியின் வியர்வை முத்துக்களில் இருந்து உருவான அஷ்டகாளிகளில் இவள் மூத்தவள் என்பதால், அம்பிகை, முத்தாரம்மன் என்று பெயர் சூட்டி அழைக்கப்படுவதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர்.
பல்வேறு ஊர்களில் இருக்கும் இந்த பகுதி மக்கள் இந்த குலசை முத்தாரம்மன் கோவில் திருவிழாவுக்கு ஒன்று சேர்வர்.நவராத்திரி ஆரம்பித்து விட்டால் மகிழ்ச்சியும் உற்சாகமும், ஆன்மிக உணர்வும் இப்பகுதிகளில் அதிகமாக பார்க்க முடியும்.
விநாயகர், காளி, முருகன் என பல்வேறு வேடமணிந்து திரியும் பக்தர்களை இந்த நவராத்திரிக்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே தூத்துக்குடி பகுதிகளில் பார்க்க முடியும்.பொதுவாக சிவாலயங்களில் லிங்கத்தை நோக்கியபடி நந்தி இருக்கும். ஆனால் குலசையில் அம்மனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் நந்திக்கு பதில் சிம்மம் உள்ளது.
இங்கு முத்தாரம்மனுடன் ஞானமூர்த்தீஸ்வரராக சிவன் காட்சி தருகிறார்.
இந்த வருடம் கொரோனா வைரஸ் பிரச்சினையால் அரசு அறிவுறுத்தல்படி வழக்கம்போல இந்த விழா பிரமாண்டமாக நடக்க வாய்ப்புகள் வாய்ப்புகள் குறைவு.
வாய்ப்பு இருப்பின் ஒருமுறை இந்த கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வாருங்கள் வாழ்வில் நல்லதே நடக்கும்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து 16 கிமீ தொலைவில் இக்கோவில் உள்ளது. தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து இந்த கோவிலுக்கு பேருந்து வசதி உள்ளது.