Entertainment
கரூரில் வாக்குக்கு செல்ஃபோன் கொடுத்த கட்சியினர்
கரூர் மாநகராட்சி 38-வது வார்டில் அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க இருந்த 38 செல்போன்களை தாந்தோணிமலை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கரூர் மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில், காலை 7 மணியளவில் 38-வது வார்டு அம்மன்நகர் பகுதியில் அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு செல்போன் வழங்குவதாக தாந்தோணிமலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதிக்குச் சென்ற போலீஸார், வாக்காளர்களுக்கு செல்போன்களை விநியோகம் செய்துகொண்டிருந்த சங்கர் (21) என்பவரைப் பிடித்து, அவரிடமிருந்த 11 செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும், அவர் அளித்த தகவலின்பேரில் அதே பகுதியில் இருந்த ஈஸ்வரி என்பவரின் வீட்டில் சோதனை நடத்தி, அவர் வீட்டிலிருந்த 27 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக கரூர் காவல் துணை கண்காணிப்பாளர் கு.தேவராஜ், பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டர் ஞா.செந்தில்குமார் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.