வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இன்னும் சில மாதங்களில் நாடு நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கவுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது. மேலும், அந்த கூட்டணியில் விடுதலை சிறுத்தை, மதிமுக, இந்திய கம்யுனிஸ்ட் உள்ளிட்ட சில கட்சிகள் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் அதிமுக – பாஜக கூட்டணி பேச்சு வார்த்தையும் நடந்து கொண்டிருக்கிறது.அந்த கூட்டணியில் தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகள் இடம் பெறும் எனத் தெரிகிறது. அதேபோல், பாமகவை கூட்டணிக்கு இழுக்கும் முயற்சிகளும் நடந்து வருகிறது.
தமிழகத்தின் முக்கிய கட்சிகள் திமுக, அதிமுக ஆகியோற்றோடு கூட்டணி அமைக்கும் நிலையில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் என்கிற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடும் என கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும், கூட்டணி அமைத்து கறை பட விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.