சென்னை உயர்நீதிமன்றம் இன்று முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளைத் திறக்கக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 45 நாட்கள் ஊரடங்குக்குப் பின்னர் நேற்று முன் தினம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளிலும் சமூக விலகலை பின்பற்றவில்லை என்பது சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோக்களில் இருந்து தெரிய வந்தது. இந்த நிலையில் அதிரடியாக சற்று முன் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவின்படி ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மதுக்கடைகளை மூடவேண்டும் என்றும் ஆன்லைனில் மட்டுமே மதுக்களை விற்பனை செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் மீறப்பட்டதால் இந்த அதிரடி உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இது குறித்து மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ‘நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையையும்,சத்தியமே வெல்லும் என்றும் நிரூபித்திருக்கிறது இந்த தீர்ப்பு.மக்களுக்கான நீதி கிடைத்திருக்கிறது.MNM மட்டும் பெற்ற வெற்றி அல்ல இது.எம் எண்ணம் வென்றது என தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி. இது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி #வெல்லும்தமிழகம் என தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தவர்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் அடக்கம்.