சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள பள்ளப்பட்டி பகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என அவர் தெரிவித்தார். மேலும், முஸ்லீம்கள் அதிகம் இருக்கும் இடம் என்பதால் இதைக் கூறவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பு நின்று கொண்டு சொல்கிறேன். அந்த இந்து தீவிரவாதியின் பெயர் நாதுராம் கோட்சே” என அவர் தெரிவித்தார்.
இதற்கு பாஜகவினர் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கமல்ஹாசனின் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.