Tamil Cinema News
கவுண்டமணி, செந்தில் கூட கட்சி தொடங்கலாம் – விஜயை கலாய்த்த ஜெயக்குமார்
சுபஸ்ரீ மரணம் தொடர்பாக நடிகர் விஜய் கூறிய கருத்துகளுக்கு அதிமுக தரப்பு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது.
பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் ஜெயஸ்ரீ மரணத்தில் யார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை செய்யாமல் லாரி ஓட்டுனரையும், பேனர் தயாரித்தவரையும் குறை சொல்கிறார்கள் எனக்கூறினார்.
அதேபோல், யாரை எங்கே வைக்க வேண்டுமோ அங்கே வைத்தால் எல்லாம் சரியாக இருக்கும் எனவும் அவர் அதிரடியாக பேசினார். ஆளும் அதிமுக தரப்பினரையே அவர் கூறியிருக்கிறார் என பலரும் கூறி வருகின்றனர். விஜயின் இந்த பேச்சு அதிமுகவினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பலரும் எதிர்வினையாற்ற துவங்கிவிட்டனர்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ ‘விஜயின் பேச்சை கேட்டுத்தான் யாரை எங்க வைக்க வேண்டும் என மக்கள் முடிவெடுக்க வேண்டியது இல்லை. பரபரப்பான கருத்தை கூறினால் படம் ஓடிவிடும் என்பதற்காகவே இப்படி பேசி வருகிறார்கள். அவரை முதல்வரிடம் அழைத்து சென்ற பேச வைக்கவில்லை எனில் சர்கார் படமே வந்திருக்காது. யாரை எங்கு வைக்க வேண்டும் என தெரிந்தே மக்கள் அதிமுக ஆட்சியை அமர வைத்துள்ளனர்’ என அவர் பேசினார்.
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் ‘அதிமுகவை தொட்டால்தான் ஆளாக முடியும் என நினைத்து பேசி வருகிறார்கள். ஆனால், அதிமுகவை தொட்டவர்கள் எல்லாம் கெட்டார்கள் என்பதே வரலாறு. படம் ஓட வேண்டும் என்பதற்காக எங்கள் இப்படி விமர்சனம் செய்கிறார்கள். பழுத்த மரம்தான் கல்லடி படும்.. விஜயோ, கவுண்டமணியோ, செந்திலோ யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஆனால், மக்களுக்கு என்ன செய்யப்போகிறார்கள் என்பதை சொல்ல வேண்டும்’ என அவர் பேசினார்.