vikram lander

விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிப்பு – மகிழ்ச்சியில் இந்தியா

தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்த சந்திராயன் 2 விண்கலம் கடந்த ஜூலை 22ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. திட்டமிட்டபடி சந்திராயன் 2 தனது பயணத்தை தொடர்ந்து வந்தது.

சில நாட்களுக்கு முன்பு நிலவின் வட்டப்பாதையில் சந்திராயன் 2 சுற்றி வந்தது. சந்திராயன் 2-வில் உள்ள விக்ரம் லேண்டரை கடந்த 6ம் தேதி நிலவில் தரையிறக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், திடீரென விக்ரம் லேண்டரில் இருந்து தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதை மிகவும் சோகமான குரலில் இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்தார். அவரை கட்டியணைத்து பிரதமர் மோடி ஆறுதல் கூறிய வீடியோவும் வெளியானது.

இந்நிலையில், விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை நமது இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதைத் தொடர்ந்து விக்ரம் லேண்டரில் இருந்து சிக்னலை பெறும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளதாக தற்போது இஸ்ரோ தலைவர் சிவன் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார்.

இந்த செய்தி இந்திய மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.