கவுண்டமணி அனுப்பிய நோட்டீஸ் – சிக்ஸர் படத்திற்கு சிக்கல்

கவுண்டமணி அனுப்பிய நோட்டீஸ் – சிக்ஸர் படத்திற்கு சிக்கல்

நடிகர் கவுண்டமணி அனுப்பிய வக்கீல் நோட்டிஸால் சிக்ஸர் படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நடிகர் வைபவ் நடித்துள்ள சிக்ஸர் திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இப்படத்தில் மலைக்கண் நோயால் பாதிக்கப்பட்ட நபராக வைபவ் நடித்துள்ளார். அதாவது, மாலை 6 மணிக்கு மேல் அவருக்கு கண்ணு தெரியாது. இது ஏற்கனவே பிரபு நடித்த ‘சின்னத்தம்பி’ படத்தில் கவுண்டமணி செய்த கதாபாத்திரமாகும். இதை அடிப்படையாக வைத்தே சிக்ஸர் படம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், கவுண்டமணியின் பேரனாக வைபவின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

அதோடு, சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லரில் ‘ஒரு கோடி ரூபா கொடுத்தா கூட ஆறு மணிக்கு மேல வேல செய்ய மாட்டேண்டா, டேய் முப்பது ரூபா கொடுத்தா மூணு ஆளைக்கு கண்ணு முழிச்சி வேல பார்ப்பேண்டா, தாத்தா டேய்! சிறப்பா பண்ணிட்டா டா, ராத்திரில்லாம் என்னென்ன அக்கிரமம் பண்ணியோ’ என வைபவ் பேசும் வசனங்கள் வருகிறது.

இது சின்னத்தம்பி படத்தில் தான் நடித்த கதாபாத்திரத்தை கொச்சைப்படுத்துவது போல் இருப்பதால், இப்படத்தில் அந்த காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்க வேண்டும். இல்லையேல் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என நடிகர் கவுண்டமணி சார்பில் படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நாளை திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் கவுண்டமணி நோட்டிஸ் அனுப்பியிருப்பது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.