தமிழகத்தில் நாளை நடைபெறும் வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்ற 38 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் மற்றும் 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படவுள்ளன.
இந்நிலையில், இது தொடர்பாக என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என தலைமை தேர்தல் அதிகரி சத்யபிரத சாகு கூறியதாவது:
தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில் சுமார் 17 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஈடுபடவுள்ளனர். வாக்கு எண்ணிக்கையை 88 பார்வையாளர்கள் கண்காணிக்க உள்ளனர். காலை 8 மணிக்கு தபால் வாக்குகளுடன் சேர்ந்து, வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும். ஒவ்வொரு சுற்று முடிந்த பின்பும் உடனுக்குடன் அறிவிக்கப்படும்.
மின்னணு இயந்திர வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பிறகே ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும்” என அவர் தெரிவித்தார்.