இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடந்த ஒரு திருமண விழாவில் பங்கேற்ற பாரதிய ஜனதா மூத்த தலைவர் ஹெச்.ராஜா திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்தார்.
திமுக அரசின் நூறு நாள் ஆட்சி தோல்வியை சந்தித்துள்ளது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
இதுகுறித்து கூறியதாவது: திமுக ஆட்சிக்கு வந்து 90 நாட்களில் ரூ.40,000 கோடி கடன் வாங்கியுள்ளது இந்த அரசு. பட்ஜெட்டில் ரூ.58,000 கோடி பற்றாக்குறையாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது பண வீக்கத்தை ஏற்படுத்தும் செயல். இதனால் விலைவாசி உயரும். வெள்ளை அறிக்கையில் அடுத்த 6 மாதங்களில் ரூ.92,000 கோடி கடன் வாங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதனால்தான் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி தர முடியாது என்கின்றனர். 1967 தேர்தலின்போது ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி தருவதாகக் கூறி, பின்பு ஆட்சிக்கு வந்தவுடன் மூன்று படி லட்சியம், ஒரு படி நிச்சயம் என்றார்கள். அதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம், இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று. திமுக அரசின் நூறு நாள் ஆட்சி தோல்வியையே சந்தித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.