கள்ளக்காதல் விவகாரத்தில் டெலிவரி பாய் ஓட ஒட விரட்டி வெட்டப்பட்ட விவகாரம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெருங்குடி திருவள்ளூர் நகரை சேர்ந்தவர் ஹரி. இவர் தனியார் ஆன்லைன் பொருட்கள் விற்பனை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சென்னை தியாகராயநகரில் வசிக்கும் மதன் என்பவரின் மனைவி ரேணுகா அடிக்கடி ஆன்லைனில் பொருட்கள் ஆர்டர் செய்ய, அதை ஹரி டெலிவரி செய்துள்ளார். அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. எனவே, ரேணுகாவின் வீட்டில் இருவரும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
இந்த விவகாரம் மதனுக்கு தெரியவர, ஹரியை கொலை செய்ய திட்டமிட்டார். தனது நண்பர்கள் 4 பேரை ஆட்டோவில் அழைத்துக்கொண்டு, ஹரி பணிபுரியும் அலுவலகம் அருகே சென்றார். அப்போது வெளியே வந்த ஹரியை ஆட்டோவில் கடத்தி சென்று, செங்கல்பட்டு பழவேளி அருகே அவரை சரமாரியாக வெட்டினர். படுகாயங்களுடன் ஓடிய ஹரியை, அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் கண்டனர். அங்கு ஓடி வந்த போலீசார் மதனை பிடித்தனர். ஆனால் மற்றவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
அதன்பின், படுகாயமடைந்த ஹரியை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர். மேலும், தப்பி ஓடிய 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.