கொரோனாவால் பாதிக்கப்பட்ட 50 வயது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சிகிச்சைப் பலனின்றி பலியாகியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 10,000 ஐத் தாண்டியுள்ளது. அதே போல நமது அண்டை நாடான பாகிஸ்தானில் பாதிப்பு எண்ணிக்கை 5716 ஆக உள்ளது. அங்கே பலி எண்ணிக்கை 100 ஐக் கடந்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸஃபார் சர்ஃபராஸ் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 1988ம் ஆண்டில் கிரிக்கெட்டில் நுழைந்த சர்ஃபராஸ் 15 முதல் தர கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடி 616 ரன்கள் குவித்தவர். 1994ம் ஆண்டு அனைத்து கிரிக்கெட் தொடர்களில் இருந்தும் வெளியேறிய சர்ஃபராஸ் பிறகு அணி பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் 50 வயதான அவருக்கு சிகிச்சை அளிக்கபப்ட்ட போதும் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இந்த செய்தியானது கிரிக்கெட் ரசிகர்களை சோகமாக்கியுள்ளது.

