விஜயகாந்தின் உடல்நிலை மட்டும் நன்றாக இருந்திருந்தால் தற்போதை அரசியல் நிலை வேறாக இருந்திருக்கும் என அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியுள்ளார்.
எதிரும் புதிருமாக இருந்த அதிமுகவும், தேமுதிகவும் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ஒன்றாக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்நிலையில், விழுப்பும் தொகுதி கஞ்சனூரில் நடைபெற்ற தேமுதிக செயல் வீரர்கள் கூட்டத்தில் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டார். அந்த மேடையில் அவர் பேசியதாவது:
இப்போது அதிமுக ஆட்சி நடந்து வருவதற்கு 2011ம் ஆண்டு தேமுதிக போட்ட அடித்தளமே காரணம். அதை எப்போதும் நாங்கள் மறப்பதில்லை. இடையில் உங்களுடன் கூட்டணி முறித்திருக்கலாம். ஆனால், எப்போதும் தேமுதிக தலைவர் விஜயகாந்தை தரக்குறைவாக நாங்கள் விமர்சனம் செய்தது கிடையாது.
விஜயகாந்தை நாங்கள் உயர்வான இடத்தில் வைத்திருக்கிறோம். அவர் ஒரு கடுமையான உழைப்பாளி. அவரின் உடல் நிலை மட்டும் நல்ல நிலையில் இருந்திருந்தால் தற்போதைய அரசியல் நிலை வேறுமாதிரி இருந்திருக்கும். எதையும் பேப்பரை பார்த்து மட்டுமே பேசும் ஸ்டாலின் இருக்கும் இடம் இல்லாமல் போயிருப்பார். வருகிற நவம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. அதில், அதிமுக-தேமுதிக கட்சிகள் இணைந்து நாம் வெற்றியை பெற வேண்டும் என அவர் பேசினார்.