நாடக நடிகர் ராதாகிருஷ்ணன் இவர். கணீர் குரலால் நாடகங்கள் நடத்தி வருகிறார் தென்மாவட்டங்களில் இவர் கால் பதிக்காத ஏரியாவே இல்லை என சொல்லலாம். மதுரை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், விருதுநகர் சிவகங்கை பகுதிகளில் இவர் செய்து வரும் உதவிகள் ஏராளம்.
குறிப்பாக இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த ஆதரவற்ற பலருக்கு உதவிகள் செய்து வருகிறார்.
மின்கம்பத்தில் இருந்து விழுந்தவர், சொந்த வீடு இல்லாதவர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள் என பலருக்கு இம்மாவட்ட கிராமங்களில் அலைந்து திரிந்து இதுபோன்றவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு உதவி செய்து வருகிறார். பலரிடம் நிதி உதவி பெற்றும் தனது சொந்த பணத்தில் இருந்தும் உதவி செய்து வரும் நாடக நடிகரான இவர் அன்பாலயம் என்ற பெயரில் ஆதரவற்றோர் விடுதி ஒன்றையும் கட்டி வருகிறார்.
கிராமத்து தெருக்கூத்துக்களில் முக்கியமான வேடங்களை ஏற்கும் இராதாகிருஷ்ணன் நடிப்பதில் வல்லவர் அதிலும் நகைச்சுவை வேடத்தில் அருமையாக நடிப்பார்.
இவர் நாடகத்துக்கு ரசிகர்கள் அதிகம் தென்மாவட்ட கிராமங்களில் இவரை தெரியாதவர்கள் குறைவு. நாடக நடிகராக இவர் இருப்பதால் சினிமா நடிகர்கள் பலரையும் இவர் அறிந்து வைத்திருக்கிறார். சிறிய வேடங்களில் நடிக்கும் பல நடிகர்களை இவர் அறிந்து வைத்திருப்பதால் பல ஆதரவற்ற நடிகர்களுக்கு உதவி வருகிறார்.
நேற்றும் இன்றும் சமூகவலைதளங்கள் நியூஸ் சேனல்கள் முழுவதையும் ஆக்ரமித்துள்ள நடிகர் தவசிக்கு புற்றுநோய் பற்றிய செய்தியை இவர்தான் முதன் முதலில் வீடியோ எடுத்து தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
வணக்கம் அருமை உறவுகளே என ஆரம்பித்து இவர் பேசுவது அழகாக கணீர் என்றிருக்கும் தனது பணத்தின்மூலமும் தனது ரசிகர்கள், சமூகவலைதள நண்பர்கள் பலர் செய்து வரும் பண உதவியாலும் ஆதரவற்ற பலருக்கு இவர் உதவி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.