ந்திராவின் ஆளுநர் மாளிகையில் பணிபுரிந்த 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு அமல்படுத்தி இருந்தாலும் கடந்த சில வாரங்களாக இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 26917 ஆக உள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 826 ஆக உள்ளது.
இந்த நிலையில் ஆந்திர மாநில ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் 4 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறி காணப்பட்டதை அடுத்து அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையின் முடிவில் தற்போது சம்பந்தப்பட்ட 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது தெரியவந்துள்ளது. மேலும் கொரோனா தொற்று பரவிய நான்கு பேர்களில் ஒருவர் ஆளுநரின் முதன்மை பாதுகாப்பு அதிகாரி என்பது அதிர்ச்சிக்குரிய தகவலாகும்.
இதனையடுத்து ஆந்திர ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிசந்திரன் என்பவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படலாம் என தெரிகிறது. இதனால் ஆளுநர் மாளிகையில் பணிபுரிந்தவர்கள் மற்றும் வந்து சென்றவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

