தமிழில் வந்த நேரம் படத்தை இயக்கியவர் அல்போன்ஸ் புத்திரன். இந்த படம் 2014ல் வெளிவந்தது. பின்பு மலையாளத்தில் இவர் இயக்கிய பிரேமம் படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.
அல்போன்ஸ் புத்திரன் நீண்ட நாட்களாக எந்தப் படத்தையும் இயக்காமல் இருந்தார். இந்த நிலையில், அல்போன்ஸ் புத்திரன் அடுத்தாக ‘பாட்டு’ என்ற திரைப்படத்தை இயக்கவிருப்பதாகவும், அப்படத்தில் நடிகர் பகத் ஃபாசில் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகவும் சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில் ரஜினிக்கு கதை வைத்துள்ளீர்களா என பேஸ்புக்கில் எழுப்பிய கேள்விக்கு கீழ்க்கண்டவாறு அல்போன்ஸ் புத்திரன் பதிலளித்துள்ளார்.இதற்குப் பதிலளித்துள்ள அல்போன்ஸ் புத்திரன், “ரஜினி சாருக்குக் கதை வைத்திருக்கிறேன். ‘பிரேமம்’ படத்திற்குப் பிறகு அவரை சந்திக்க முயற்சி செய்தேன். ஆனால், இதுவரை சந்திக்க இயலவில்லை. ரஜினி சாரை வைத்து நான் படம் இயக்க வேண்டும் என இருந்தால் அது நடந்தே தீரும். நாம் பாதி வேலை செய்துவிட்டால் மீதி வேலையைக் கடவுள் பார்த்துக்கொள்வார் என நம்பிக்கை உள்ளது. கடவுள் கரோனாவை அழிப்பதில் பிஸியாக இருக்கிறார் என்று நினைக்கிறேன். அதன்பிறகு திரும்பவும் முயற்சி செய்வேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.