Vairamuthu angry notice on language in school

தமிழ் அல்லது ஆங்கிலம் ; பொங்கியெழுந்த வைரமுத்து ; என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?

பள்ளிகளில் மொழிப்பாடங்களில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஏதேனும் ஒன்றை மாணவர்கள் தேர்வு செய்யலாம் என்கிற தகவல் வெளியாகி தமிழ் ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

sengotayan

11 மற்றும் 12ம் வகுப்புகளில் மொழிப்பாடங்களில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஏதோ ஒன்றை மாணவர்கள் விருப்பம் போல் தேர்வு செய்யலாம் என்கிற தகவல் சமீபத்தில் வெளியானது. இது தமிழ் ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

இது தொடர்பாக வைரமுத்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது:

தமிழ் அல்லது ஆங்கிலம் ஏதேனும் ஒரு மொழியை தேர்வு செய்து தேர்வு எழுதினால் போதும் என்ற பள்ளிக் கல்வித்துறையின் பரிந்துரையை நான் கவலையோடு கண்டிக்கிறேன். 

தமிழ் பயிர் ஆயிரமாயிரம் ஆண்டுகள் செழிப்பதற்கு நாங்கள் விதைநெல்லாக நம்பி இருப்பது பள்ளித் தமிழைத்தான். இப்போது விதை நெல்லை ஏன் வேகவைக்கப் பார்க்கிறீர்கள்? தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயம். பிறமொழிதான் விருப்பம் என்பதே தாய்மொழி நியாயம்.

இந்தச் செய்தி கேட்டதில் இருந்து என் இரத்த அழுத்தம் கூடியிருப்பதாய் என் இதயத் துடிப்பு உணர்த்துகிறது. தமிழோடு ஆங்கிலம் என்ற அண்ணாவின் இருமொழிக் கொள்கைதான் தமிழர்களின் கால தேவையாக இருக்கிறது. தமிழை விருப்பப் பாடப்பட்டியலில் விட்டுவிட முடியாது.

 தமிழக அரசு இந்த பரிந்துரையை நிராகரிக்க வேண்டும். அதை வற்புறுத்தித் தமிழ் அறிஞர்களையும், ஆர்வலர்களையும், அமைப்புகளையும் திரட்டி முதலமைச்சரை சந்திக்க விழைகிறேன். தீர்வு கிட்டாவிடில் அக்கினி நட்சத்திர வீதிகளில் நாங்கள் ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டுப் பாடவும் தயங்க மாட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இதுபற்றி விளக்கம் அளித்த கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அப்படி வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது எனக் கூறியுள்ளார்.