Banner

சுபஸ்ரீ மரணம் ; பேனர் வைத்த கவுன்சிலருக்கு நெஞ்சுவலி : மருத்துவமனையில் அனுமதி

பேனர் கீழே விழுந்து ஏற்பட்ட விபத்தில் மரணமடைந்த சுபஸ்ரீயின் வழக்கு தொடர்பாக கைது செய்யப்படவிருந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த ஒரு பேனர் ஒன்று அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ என்கிற பெண் மீது விழுந்தது. இதில், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறி மரணமடைந்தார். இந்த விவகாரம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிக்கரணை பகுதி முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலின் இல்ல திருமணத்திற்காகவே இந்த பேனர்கள் வைக்கப்பட்டது. எனவே, அவரை கைது செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், நெஞ்சுவலி காரணமாக ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைதுக்கு பயந்தே அவர் மருத்துவமனையில் சென்று படுத்துக்கொண்டதாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கொந்தளிப்புடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.