கஜா புயலில் பாதிக்கப்பட்ட மாணவி சிவகார்த்திக்கேயன்

கஜா புயலில் பாதிக்கப்பட்ட மாணவியின் மருத்துவ ஆசையை நிறைவேற்றும் சிவகார்த்திக்கேயன்!

கஜா புயலில் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியான தஞ்சாவூரின், பூக்கொல்லை பகுதியை சேர்ந்த சஹானா என்ற மாணவியின் வீடும் தரமட்டமாகியது.

ப்ளஸ் 2 மாணவியான சஹானா, தற்போது வந்த ப்ளஸ் 2 தேர்வு முடிவில், 600 மதிப்பெண்களுக்கு 524 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

அதுகுறித்து, அந்த மாணவியின் ஆசிரியரான செல்வம், தனது ட்விட்டர் பக்கத்தில் உதவி கேட்டு பதிவிட்டுள்ளார். “மின்சாரம் இல்லாத கஜா புயலில் விழுந்த குடிசை வீட்டில் வாழ்ந்து கொண்டு மன உறுதியுடன் படித்து, நடந்து முடிந்த ப்ளஸ் 2 தேர்வில் 600க்கு 524 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். தஞ்சாவூர் பேராவூரணி அருகில் உள்ள பூக்கொல்லை பகுதியை சார்ந்த மாணவி சஹானா. #ஊக்கமது கைவிடேல் ” என தன் ட்விட்டர் ப்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு ட்விட்டரில் வைரலாகி வருகிறது. அதை தொடர்ந்து சஹானாவிற்கு மருத்துவம் படிக்க ஆசை, அதனால், பண உதவி தேவை என்றும் ட்விட்டரில் பதிவு வெளியாகியது. அதை கண்ட பலரும் உதவ முன் வந்துள்ளனர்.

அதை தொடர்ந்து, அந்த ட்வீட்க்கு பதில் அளித்த சிவகார்த்திக்கேயன், அடுத்து என்ன வேண்டுமானாலும் படிக்கட்டும், முழு செலவையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று ட்வீட் செய்துள்ளார். அதற்கு அனைவரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதனால், சஹானாவின் குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.