ஒத்த செருப்பு திரைப்படத்தின் அம்சங்களை இயக்குனர் வசந்தபாலன் மிகவும் பாராட்டியுள்ளார்.
எதையும் வித்தியாசமாக யோசிக்கும் பார்த்திபன் சில சமயம் பரிசோதனை முயற்சிகளையும் மேற்கொள்வார். அப்படி பார்த்திபன் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் ஒத்த செருப்பு. இப்படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் நடித்திருப்பது போல் திரைக்கதையை பார்த்திபன் அமைத்துள்ளார். இப்படத்தை பார்த்த பல திரைத்துறை பிரபலங்கள் இப்படத்தை பாராட்டி பேசி வருகின்றனர்.
இந்நிலையில், வெயில், அங்காடித்தெரு உள்ளிட்ட படங்களை இயக்கிய வசந்தபாலன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
சில தினங்களுக்கு முன்பு இயக்குநர் ரா.பார்த்திபன் சாரின் அழைப்பின் பேரில் ஒத்த செருப்பு திரைப்படத்தை கண்டேன்.
ஒருவரை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதுவது மற்றும் இயக்குவது மிக பெரிய சவால். அதை உலகமெங்கும் பல்வேறு திரைஆளுமைகள் சாதித்து காட்டியுள்ளனர்.
பார்த்திபன் சார் இதை எவ்வாறு கையாண்டுள்ளார் என்று எதிர்பார்ப்பு படவெளியீடு அறிவிப்பு வந்த நாளில் இருந்தே எனக்குள் ஒரு படைப்பாளியாய் அணையாமல் எரிந்து கொண்டிருந்தது.
ஆகவே அதிக ஆர்வத்துடன் படத்தை பார்த்தேன். ஒளி, ஒலி, எடிட்டிங், இசை, வசனம், மேக்கப் இப்படி பல தொழிற்நுட்பங்களை மிக நுட்பமாக கையாண்ட திரைப்படமாக இந்த திரைப்படத்தை நான் உணர்ந்தேன். ஆழமான விசாரணைகளை,கேள்விகளை நமக்குள் உருவாக்குகிற திரைப்படமாக படம் விரிகிறது. சமகால அரசியலை, நடுத்தர வர்க்கனின் அன்றாட வாழ்க்கையை பார்த்திபன் சாருக்கே உண்டான நையாண்டியுடன் படம் நெடுக வசனங்களை எழுதியுள்ளார் பேசியுள்ளார்.
பார்த்திபன் சாரின் வசன அமைப்பு ஒரு கத்திக்குள் ஒரு குறும் கத்தி அதற்குள் இன்னொரு சிறிய கத்தி அதற்குள் இன்னும் ஒரு சின்னஞ்சிறிய கத்தியும் மயிலிறகுயும் இருக்கும். மிக கவனமாக படத்தை பார்க்கையில் கதையின் பல்வேறு படிமங்கள் வசனங்களில் உறைந்து கிடப்பதைக் காணலாம்.
பரீட்சார்த்த முயற்சிகள் எந்தவொரு துறைக்கும் அவசியமானது. அப்படி இந்த திரைப்படம் தமிழ்த்திரைப்படங்களில் ஒரு பெரிய முன்னெடுப்பு. வாழ்த்துகள் பார்த்திபன் சார். பல உயரிய விருதுகள் உங்கள் வாசல் வரட்டும்.
என அவர் குறிப்பிட்டுள்ளார்.