நிற்க நேரமில்லாமல் தங்களது ஆசை, கனவு, லட்சியத்தை நோக்கிய ஓட்டத்தில் இன்றைய இளைஞர்கள். பசிக்கு சாப்பிடும் பழக்கம் நிறைய பேரிடம் இருக்கிறதே தவிர ருசித்து உண்ணுவது குறைந்து வருவதாக சொல்லப்படுகிறது.
சமையலறையில் நேரம் செலவழித்து தங்களுக்கு பிடித்த உணவுகளை சாப்பிட்ட காலம் மாறி. ஆன்-லைனில் ஆர்டர் சொல்லி சாப்பாட்டை இருக்குமிடம் தேடி வரவழைத்து விட்டது நாகரீக வாழ்க்கை.

ஆரோக்கியம் குறைவான ஃபாஸ்ட் ஃபூட் வகைகளை சாப்பிடுவதை தவிர்க்க மருத்துவர்கள் பற்றி எத்தனையோ விதமான விழிப்புணர்வுகளை வழங்கி வருகிறார்கள். இதனால் ஹார்மோன் இம்பேலன்ஸ்கள் ஏற்பட்டு, ஆரோக்கியம் குறித்த கோளாறுகளை ஏற்படுத்தியும் விடுகிறது ஒரு சில ஃபாஸ்ட் ஃபூட் வகைகள். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இது போன்ற உணவை சாப்பிட்டு உயிர் பறிபோன சோக நிகழ்வும் நடந்தது.
உணவு விடுதி ஒன்றில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த பதினான்கு வயது மாணவி கலையரசியின் உயிர் பறிபோனது. அவரை போலவே அதே உணவகத்தில் சாப்பிட்ட நாற்பத்தி மூன்று பேரும் பல்வேறு உபாதைகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர்.
உயிரிழந்த கலையரசியின் தாயார் பாதிப்பிற்குள்ளான நாற்பத்தி மூன்று பேருக்கும் ரூபாய் ஐம்பது லட்சத்தை இழப்பீடாக வழங்கக்கோரி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
பொது நல வழக்காக இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி உணவக உரிமையாளர், மாவட்ட ஆட்சியர், உணவு பாதுகாப்பு அலுவலர் ஆகியோரை வருகிற ஜூலை மாதம் பத்தொன்பதாம் தேதி ஆஜராகி வழக்கு குறித்து பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக இறப்பு சம்பவம் நடந்ததும் குறிப்பிட்ட உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டதோடு, நாமக்கல் மாவட்ட முழுவதும் சிக்கன் ஷவர்மா விற்க தற்காலிக தடை போடப்பட்டது. தனது மகள் உயிர் பறிபோய் விட்ட நிலையில் யார் என்றே தெரியாத பாதிக்கப்பட்ட நபர்களுக்காக நீதி கேட்டுள்ளார் கலையரசியின் தாய்.











