நடிகர் விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகருக்கு திருப்பூர் பாஜக இளைஞர் அணியினர் அனுப்பியுள்ள ஒரு பார்சல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
80களில் புரட்சிகரமான கருத்துகளை கொண்ட திரைப்படங்களை எடுத்து வந்தவர் எஸ்.ஏ.சி. சந்திரசேகர். எனவே, புரட்சி இயக்குனர் என்கிற பட்டமும் அவருக்கு உண்டு.
மெர்சல் படம் வெளியான போது பாஜகவினர் நடத்திய சில அலப்பறைகளால் அதிருப்தி ஆன எஸ்.ஏ.சி. பாஜகவுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு சினிமா விழாவில் பேசிய அவர் ‘பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாம் அனைவரும் காவி வேட்டி அணிந்து சுற்ற வேண்டியதுதான் எனப்பேசியிருந்தார். இந்நிலையில், தற்போது பாஜகவே மீண்டும் ஆட்சி அமைத்துள்ள நிலையில் திருப்பூர் இளைஞர் அணி பாஜகவை சேர்ந்த சிலர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு ஒரு பார்சலை அனுப்பியுள்ளனர். அதில், சில காவி வேட்டிகளை அவர்கள் வைத்திருந்தனர். மேலும், இனிமேல் நீங்கள் வாழ்நாள் முழுக்க காவி வேட்டி கட்டி அலையுங்கள் என எழுதப்பட்ட கடிதமும் அதில் வைக்கப்பட்டிருந்தது.