வர்மா படத்தை கைவிடுவதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது அப்படத்தின் இயக்குனர் பாலாவை அப்செட் ஆக்கியுள்ளதாக செய்தி கசிந்துள்ளது.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘அர்ஜீன் ரெட்டி’ திரைப்படம் தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களையும் மிகவும் கவர்ந்தது. தமிழில் நடிகர் விக்ரம் மகன் துருவை வைத்து, பாலா இயக்க ‘வர்மா’ என்கிற பெயரில் இப்படம் உருவானது. படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தை கை விடுவதாக இப்படத்தை தயாரித்த இ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் நேற்று திடீரென அறிவித்தது. படத்தின் இறுதி வடிவம் எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை. மேலும் படத்தின் உருவாக்கத்தில் பல்வேறு வேறுபாடுகள் இருப்பதால், படத்தை கைவிட முடிவு செய்துள்ளோம். மேலும் வர்மா படத்தை துருவ்வை வைத்தே மீண்டும் முதலில் இருந்து எடுக்க முடிவு செய்திருக்கிறோம் என அந்நிறுவனம் கூறியுள்ளது.
இந்த படம் தொடங்கும் போதே அர்ஜூன் ரெட்டியை அப்படியே எடுக்க மாட்டேன். எனது ஸ்டைலில்தான் எடுப்பேன் எனக்கூறி விட்டுத்தான் பாலா எடுத்தாராம். அப்படி இருக்க படத்தை கைவிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது பாலாவிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக வெளியே செய்தி கசிந்துள்ளது.