Tamil Cinema News
நடிகர் அபிசரவணன் மீது நடிகை அதிதி மேனன் புகார்
திருமணம் ஆகிவிட்டது போல் போலியான ஆவணங்களை தயார் செய்து நடிகர் அபிசரவணன் அவதூறு பரப்பி வருவதாக நடிகை அதிதி மேனன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
‘பட்டதாரி’, ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் அபிசரவணன். இவர் சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார். இவரும், பட்டதாரி படத்தில் இவருடன் இணைந்து நடித்த நடிகை அதிதி மேனனும் பதிவு அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டதாகவும், அதன்பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.
அதேபோல், அபிசரவணன் கடத்தப்பட்டதாக அவரின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அவரை தேடி வந்த நிலையில், வீடு திரும்பிய சரவணன் தன்னை யாரும் கடத்தவில்லை எனக்கூறினார்.
இந்நிலையில், நடிகை அதிதி மேனன் நேற்று மாலை சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சரவணனுக்கு எதிராக ஒரு புகார் அளித்தார். அதில், பட்டதாரி படத்தில் நடித்தபோது நானும் சரவணனும் காதலித்தோம். அப்போது பதிவு திருமணம் செய்வதாக கூறி விண்ணப்பத்தில் கையெழுத்து வாங்கினார். ஆனால், அவரின் நடவடிக்கை பிடிக்காததால் அவரை நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவருடனான காதலையும் முறித்துக்கொண்டேன். அவரை நான் கடத்தவும் இல்லை. ஆனால், நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டது போல் போலி ஆவணங்களை தயார் செய்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வருகிறார் என குறிப்பிட்டுள்ளார்.
இதுபற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.