வயநாடு பகுதியில் அடுத்து 6 மாதத்திற்கு மின்சார கட்டணம் கிடையாது என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
கேரள மாநிலம், வயநாடு பகுதில் கடந்த 30ஆம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல கிராமங்கள் சின்னா பின்னமாகிவிட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் முண்டகை, சூரல்மலை, அட்டமலை, பூஞ்சிரிமட்டம் உள்ளிட்ட பகுதிகளில் ஆள் இருந்ததற்கு அடையாளமே தெரியாத அளவுக்கு மண்மூடியும் உருக்குலைந்தும் காணப்படுகின்றது.
நிலச்சரிவில் மீட்கப்பட்டவர்கள் தங்களது வீடுகளில் எஞ்சி இருக்கும் உடைமைகள் மற்றும் ஆவணங்களை சேகரித்து வருகிறார்கள். வீடுகளில் திருட்டு நடப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். வீட்டுப் பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவில் காணாமல் போனவர்களை தேடும் பணி 9-வது நாளாக இன்று தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் வயநாட்டு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 6 மாதங்களுக்கு மின் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று கேரள மாநில மின்துறை மந்திரி கிருஷ்ணன் குட்டி தெரிவித்து இருக்கின்றார். வயநாட்டின் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பீடு செய்யும் பணி தொடங்கி இருக்கின்றது, இதற்காக 10 குழுவினர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.